ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமியை கொலை செய்யும் நோக்குடன் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அவரது வீட்டை இலக்குவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈரான் பிரதமர் முஸ்தபா அல் கதிமியை குறி வைத்து பாக்தாத் பசுமை மண்டலத்தில் அமைந்துள்ள அவரது வீட்டின் மீது நேற்று வெடிபொருட்கள் நிரப்பிய டிரோன் மூலம் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ரொக்கட் தாக்குதல்களும் நடத்தப்பட்டன.
இந்த தாக்குதல்களில் பிரதமரின் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் படுகாயம் அடைந்தனர். எனினும் பிரதமர் முஸ்தபா அல் காதிமி காயமின்றி உயிர் தப்பினார்.
இந்த தாக்குதல்களுக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
இந்நிலையில் பிரதமர் முஸ்தபா அல் காதிமியை கொலை செய்யும் நோக்குடன் இடம்பெற்ற தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈராக் அரசின் இதயமான பிரதமர் இல்லத்தின்மீது நடத்தப்பட்ட இந்த வெளிப்படையான பயங்கரவாத செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம் என இது குறித்து அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.
ஈராக்கின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கு பொறுப்பேற்றுள்ள அந்த நாட்டின் பாதுகாப்பு படைகளுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். இந்த தாக்குதல் தொடர்பான விசாரணையில் உதவுவதற்கு தயாராக இருக்கிறோம் எனவும் அவா் குறிப்பிட்டுள்ளார்.